கடலை பருப்பே,

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கவிஞர் பட்டாளத்தை கையில் போட்டுக்கொண்டு ஏதோ தமிழ் உலகிற்கு பெரும் சேவை செய்வது போல் கபடநாடக வேஷமிடுகின்றன.

அந்த கட்சிகளின் முகத்திரையை கிழிக்க நமது கட்சியில் நண்பர் ‘திருட்டுமுழி’ அவர்கள் சேர்ந்துள்ளார் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இனி அவரை அனைவரும் ‘கவிஞர் திருட்டுமுழி’ என்றே அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கனிவான மொழியான தமிழில் கவிதை எழுதுவது கடினமோ இல்லையோ கவிஞர் பட்டம் வாங்குவது சுலபம் என்பதற்கு திருட்டுமுழியே சிறந்த எடுத்துக்காட்டு. இப்பொழுது நான் இவரை கவிஞர் என்று குறிப்பிட்டு விட்டேன். அது போதுமா இவரை கவிஞர் ஆக்க? ஆகவே ஒரு விழா எடுக்க வேண்டியதுதான். விழாவில் இவர் சில கவிதைகளை எடுத்துரைப்பார். அது போதாதா?

வீட்டுக்கு ஒரு கலர் டிவி. போல வீட்டுக்கு ஒரு கவிஞரை உருவாக்குவதுதான் திருட்டுமுழியின் வாழ்க்கை இலட்சியம். கவிஞராவது எப்படி என்ற பாடத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி என்னிடம் இந்த மடலை கொடுத்தார். அதை உங்களுக்கு வழங்குகின்றேன். நீங்களும் கவிஞர் ஆகலாம்.

வணக்கம்
கவிஞர் எனப்படுபவன் கூறும் வணக்கம் மிக முக்கியமானது. அதுவும் வணக்கத்தில் ‘தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என் முதற்கண் வணக்கத்தைத்தெரிவித்துகொள்கிறேன்’ என்ற வாக்கியம் மிக முக்கியம்.
உதாரணம்:
‘தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என் முதற்கண் வணக்கத்தைத்தெரிவித்துகொள்கிறேன். தலைவா உனக்கு மாலைக்கண் வராமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

பாரதி
கவிஞர் என்பவன்(ள்) பாரதியை ஒருமையில் விளிக்காவிடால் மதிப்பு கிடையாது. என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை. பாரதி பெயர் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

உதாரணம்:
அன்றே சொன்னான் பாரதி
பாச்சா மாமா பேரு பார்த்தசாரதி

பொதுப்பிரச்சனை
மக்கள் மனதில் இடம் பிடிக்க பொதுப்பிரச்சனைகள் பற்றி அடிக்கடி பேச வேண்டும். பெரிசாக தேடி அலையவேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் பிரச்சனைக்கா பஞ்சம்?

உதாரணம்:
எங்க வூடு பக்கத்திலே பஸ் ஸ்டாண்டு
வாங்கிட்டு வாடா கொசுவத்தி ஸ்டாண்டு

அதே நேரத்தில் யாராவது உங்களை ‘பொது மக்களுக்கு என்ன தொண்டு செய்தாய்?’ என்று கேட்டால் ‘கவிதை எழுதினேன், பிரதமருக்கு கடிதம் எழுதினேன்’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். இப்பொழுது தமிழகத்தில் மழை பெய்கின்றது. உடனே ஒரு கவிதை எழுதினால் முடிந்தது நம் பங்கு.

இயற்கை செய்த பிழை
மார்கழியில் பெய்கிறது மழை

வாழ்த்து
கடைசியாக நன்றாக காக்கா பிடிக்க தெரிந்து இருக்க வேண்டும். அரசியல் தலைவர் பிறந்த நாள் பொழுது சில உளறல்களை வரிசைப்படுத்தி மடல் வாழ்த்து என்று அறிவிக்க வேண்டும்.

உதாரணம்:
கிழக்கே சூரிய உதயம்
தலைவர் ஜென்ம நட்சத்திரம் சதயம்

அவ்வளவுதான். இது போன்று அடிக்கடி உளறிக்கொண்டே இருந்தால் எவனும் சட்டை (இல்லை பனியன்) கூட செய்ய மாட்டான். நீங்களும் கவிஞர் ஆகலாம். நன்றி வணக்கம். அனைவரும் கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள்.

பி.கு. பாரதியை வம்புக்கு இழுத்தது அவரை கேலி செய்ய அல்ல. அவர் பேரை உபயோகப்படுத்தி ஆதாயம் தேடும் அற்ப மானிட பதர்களை கேலி செய்யவே. ஆகவே பாரதி ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

நண்பர் கோபாலின் பல்பொடியுடன்
-பிரபு