கடலை பருப்பே,
பெங்களூர், மடிவாளா நான்காவது குறுக்கு சந்து மொட்டை மாடியில் காத்தாடி விடும் சங்கத்தில், நாளை என்னை பேச அழைத்து உள்ளனர். அந்த பேச்சின் எழுத்து வடிவை தங்களிடம் இணையதளத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பெரியோர்களே, தாய்மார்களே, காத்தாடியை டீல் செய்யும் கில்லாடிகளே, எதிரிகளை ஆள் வைத்து அடிக்கும் குண்டர்களே, என் அன்பு தொண்டர்களே

அனைவருக்கும் என் எனிய போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். சமீப காலமாக நமது கட்சி தொண்டர்கள் ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்ற பழமொழியினை தவறாக புரிந்து கொண்டு மிகவும் குண்டாக மாறி விட்டனர். இதை பார்த்து எதிர்கட்சியினர் ‘உன் தொண்டர்கள் குண்டு நீ ஒரு மண்டு’ என்று பரிகாசம் செய்கின்றனர்.

இந்த நிலவரம் பெரும் கலவரமாக மாற கூடாது என்று அவசர அவசரமாக நண்பர் நச்சு நமச்சிவாயத்தை சந்தித்து விவரமாக எடுத்துரைத்தேன். அவர் கூறினார் ‘நீர் உமது தொண்டர்களை உடற்பயிற்சி செய், உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று கூறினால், எவனும் கேட்க மாட்டான். ஆகவே அவர்கள் அனைவரையும் பெங்களூர் வரச்சொல்லும். இங்கு இருக்கும் அழகான பெண்களை பார்த்து பெருமூச்செறிவான். பிறகு அவளை தள்ளிகொண்டுச் செல்லும் கூல் டூடைக் கண்டு வயிறெரிவான். உடலில் உள்ள கேலரிகள் அனைத்தும் எரியும், உடல் மெலியும்’. ஆகவே நமது கட்சியில் தொகுதி வாரியாக ‘உள்ளூர் வயிற்றெரிச்சல் கோஷ்டி’ ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று இருக்கிறேன்.

நண்பர் நச்சு இன்னொரு விஷயத்தை கூறினார். அரசியலில் முன்னேற வேண்டுமானால், திரைப்படத்துறையை பற்றி அடிக்கடி ஏதாவது உளறிக்கொண்டு இருக்கவேண்டுமாம். நான் சிந்தித்து பார்த்தேன். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளை கேட்டு இருப்பாய். அதுபோல் நடிகை எம்மொழியாயினும் அவளை பார்த்து ஜொள்ளுவான் தமிழன் என்பதை நான் கண்டுப்பிடித்தேன். இப்பொழுது நாம் நடிகைகளை பல்வேறு விதமாக பிரிக்கலாம்.

1. குத்து ஆட்டம் நடிகைகள். மல்லிகா ஷெராவத், நமிதா போன்ற நடிகைகள் இந்த பிரிவில் வருவர்.
2. பீட்டர் விடும் நடிகைகள். த்ரிஷா, அஸின், ஷ்ரியா போன்ற நடிகைகள் இதில் உண்டு
3. அழுமூஞ்சி நடிகைகள். தேவயானி போன்ற நடிகைகள் இதில் அழுவர்.

இவர்களை எல்லாம் நமது கட்சி ஆதரிக்காது. மேக்கப் போடாமலே அழகாக இருக்கும் பிரியாமணி, கனிகா, கமலினி போன்ற நடிகைகளை ஆதரிப்போம். அதுவும் என்ன அழகாக பாடும் கனிகாவிற்கு தலைவரின் இதயத்தில் இடமளிப்போம். இவர்கள் அனைவருக்கும் தலா நான்கு படங்களில் வாய்ப்பளிக்குமாறு திரைப்படத்துறையினரை எச்சரிக்கின்றேன், நச்சரிக்கின்றேன்.

ஆகவே நான் கூற வருவதென்னவென்றால், ‘தமிழ் பண்டிகையான போகியை முன்னிட்டு தமிழகம் செல்லும் அனைத்து இரயில்களிலும் இரண்டு கூடுதல் போகியினை இரயில்வே வாரியம் இணைக்க வேண்டும்’. பேச வாய்ப்பளித்த மாஞ்ஜா மச்சிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

கையில் நூலுடன்
-பிரபு